காப்பீடு திட்டங்கள் விற்பனை ஒப்பந்தம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற (இடமிருந்து) மேக்ஸ் லைஃப் காப்பீடு நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் விஸ்வானந்த், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன், சோழமண்டலம் எம்எஸ் காப்பீடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூரிய நாராயணன். 
வணிகம்

காப்பீடு திட்டங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2 நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்காக மேக்ஸ் லைஃப் ஆயுள் காப்பீடு நிறுவனம் மற்றும் சோழமண்டலம் எம்எஸ் பொது காப்பீடு நிறுவனம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வணிக ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன், சோழமண்டலம் எம்எஸ் பொது காப்பீடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சூரிய நாராயணன், மேக்ஸ் லைஃப் காப்பீடு நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் விஸ்வானந்த் ஆகியோர் கூட்டாக, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு திட்டங்கள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையில், மேக்ஸ் லைஃப் காப்பீடு நிறுவனம் மற்றும் சோழமண்டலம் எம்எஸ் காப்பீடு நிறுவனங்களுடன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 509 கிளைகளிலும், மேக்ஸ் லைஃப் ஆயுள் காப்பீடு மற்றும் சோழமண்டலம் பொது காப்பீடு நிறுவனத்தின் ஆயுள் காப்பீடு, வாகனம், தனிநபர், விபத்து காப்பீடுகள், சொத்து, விபத்து உட்பட பல்வேறு காப்பீடு திட்ட சேவைகள் இந்த நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும்.

மேக்ஸ் லைஃப் நிறுவனம் இதுவரை 99.3 சதவீதம் இழப்பீடு கிளெய்ம் தொகை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் பாதுகாப்பாக, துரிதமாக காப்பீட்டு சேவையை வழங்கி வருகிறது. சோழமண்டலம் காப்பீடு நிறுவனம் விவசாய விளைபொருள் இழப்புகளை ஈடுசெய்யும் திட்டம், சிறு வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீடு திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்த காப்பீடு நிறுவனங்களின் திட்டங்களை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது செயலி மூலமாக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT