பொள்ளாச்சி: இந்தியா முழுவதும் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயத்தை கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களிடம் இருந்து வாங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியும், நீதிமன்றமும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளன. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டது.
அக்கடை நிர்வாகிகள் 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்த நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் பலர் 10 ரூபாய் நாணயத்துடன் கடை முன்பு வரிசையில் வந்தனர். முதலில் வந்த 125 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.