புதுடெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு உறுப்பினர்களுடன் நேற்றுகாணொலி வாயிலாக உரையாடினார். அந்தச் சந்திப்பில் அவர் இந்தியாவின் ஐவுளித் துறை நிலவரம் குறித்தும் ஏற்றுமதி இலக்கு குறித்தும் பேசினார்.
பருத்தித் தேவை குறித்து அவர் கூறுகையில், “பருத்தித் தேவையை பூர்த்தி செய்யும் வழிமுறைகளை அத்துறையினர் திட்டமிட வேண்டும். அதேபோல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பருத்தியை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஜவுளி ஏற்றுமதி குறித்து அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 4,200 கோடி டாலராக இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இதை 10 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நாம் அடையும்பட்சத்தில், இந்தியாவின் ஜவுளித் துறையின் மதிப்பு 25 ஆயிரம் கோடி டாலராக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.