ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தன. கரோனா தொற்று பரவும் முன்பு, இந்த போட்டிகள் அங்கு தொடங்கின.
வீரர்கள் விளையாடும் போது அவர்களின் பின்பக்கம் நின்று, தவறவிடும் பந்தையும், மைதான எல்லையை விட்டு வெளியே செல்லும் பந்தையும் எடுத்து தரும் சிறுவர், சிறுமியர்களை ’பால் கிட்ஸ்’ என்றழைப்பார்கள்.
இவர்கள் மைதானத்தின் நாலா திசைகளிலும் நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி தருபவர்கள், இவர்களது அலுவலர்கள் என அனைவருக்கும் திருப்பூரில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சீருடை தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைத்தது திருப்பூர் பின்னலாடை நிறுவனம்!
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பெட் பாட்டில்கள் எனப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மருந்து பாட்டில்களில் இருந்து நூல் தயாரிக்கப்பட்டு, அதில் இருந்து ஆடை தயாரித்து அனுப்பி உள்ளனர்.
பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்து தான், பாலியெஸ்டர் துணி தயாரிக்க முடியும். அதில் இருந்து தான், பெட் பாட்டில்களும் உற்பத்தி செய்யப்படும்.
இந்நிலையில் பெட் பாட்டில்களில் இருந்து, பாலியெஸ்டர் நூல் தயாரித்து, அதில் இருந்து ஆடை உற்பத்தி செய்து, ஆஸ்திரேலியாவுக்கு தற்போது அதனை அனுப்பி வைத்து அவர்கள் அப்போதைய ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பயன்படுத்தியதைக் கேட்டு திருப்பூர்வாசிகள் பலரும் ஆச்சர்யத்துடன் திகைத்தனர்.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் இயங்கி வரும் என்.சி. ஜான் அன் சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் அலெக்ஸாண்டர் ஜாப் நெரொத். அவர் தான் இந்த சாதனையைச் செய்தவர்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திவரும் அமைப்பு, டென்னிஸ் ஆஸ்திரேலியா ஆகும். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஆடுகளத்தில் பால் கிட்ஸூகளுக்கான சீருடைகளை கேட்டிருந்தனர்.
அதன்படி கடந்த கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி, பெட் பாட்டில்களில் இருந்து நூல் எடுத்து, அதனை துணியாக மாற்றுவது தொடங்கி அனைத்து பணிகளும் செய்யப்பட்டன.
இதற்காக வடமாநிலங்களில் பெட் பாட்டில்களில் இருந்து பாலியெஸ்டர் நூல் எடுக்கும் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து, நூல் தயாரித்து அதனை துணியாக மாற்றினோம்.
இதற்கான 4 லட்சம் பெட் பாட்டில்களில் இருந்து, 25000 டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டன. அதேபோல் அந்த டி-சர்ட்டில் எத்தனை பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டோம்” என்றார்.
இதனை பார்த்த இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகள், எங்கள் நிறுவனத்தை ஆச்சரியத்துடன் பார்த்தது இன்றைக்கு எங்கள் நெஞ்சில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததொரு உற்பத்தியிலேயே ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றார்.