புதுடெல்லி: சீன செயலிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கி நடந்த மோசடியில் பணம் செலுத்திய ரேசர்பே, பேடிஎம், கேஷ்ஃப்ரீ ஆகிய நிறுவனங்களின் பெங்களூர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது.
சீனாவை சேர்ந்த சிலர் செல்போன் செயலி மூலமாக உடனடியாக கடன் வழங்கி, கடன் பெற்றவர்களிடம் இருந்து சட்டவிரோத முறையில் கூடுதல் பணம் வசூலித்தனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சீன கடன் செயலிகள் முடக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த உடனடி கடன் செயலிகள் எல்லாம் சீன சர்வர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது கண்டறிப்பட்டது. இது தொடர்பாக இந்த மோசடியில் ஈடுபட்ட ஏராளமான நிறுவனங்கள், நபர்கள் மீது பெங்களூர் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் 18 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். சீன செயலிகள் மூலம் சட்டவிரோத முறையில் உடனடியாக பணம் செலுத்திய ரேசர் பே, பேடிஎம், கேஷ்ஃப்ரி ஆகிய நிறுவனங்களின் பெங்களூர் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
சீன நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கி கணக்குகளில் இருந்து ரூ.17 கோடியை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள், இந்தியர்களின் போலி ஆவணங்களை பயன்படுத்தி, அவர்களை அந்த நிறுவனங்களின் இயக்குநர்களாக கணக்கு காட்டி குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன என அமலாக்கத்துறை கூறியுள்ளது.