சென்னை: தமிழகத்தில் 82,000 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மின்சார வானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘ஃபேம் இந்தியா’ என்ற திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த 2015ம் ஆண்டில் அறிவித்தது. தற்போது, ‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் 01 , 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 10,000 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 27,95,04,016 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை 13,34,385. மின்சாரம் அல்லாத வாகனங்களின் எண்ணிக்கை 27,81,69,631 ஆகும்.
இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3,37,180, டெல்லியில் 1,56,393, கர்நாடகாவில் 1,20,532, மகாராஷ்டிராவில் 1,16,646, பிஹாரில் 83,335 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 82,051 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2,99,24,427 ஆகும். இதில் மின்சார வாகனம் 82,051. மற்ற வாகனம் 2,98,42,376.
‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நாடு முழுவதும் 2877 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தல் 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதைத் தவிர்த்து சென்னை - புவனேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் 120, சென்னை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 74, சென்னை - பெல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் 62, சென்னை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 114 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.