வணிகம்

5 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: இறக்குமதியாகும் தங்கத்திற்கு வரி உயர்த்தப்பட்டதால் தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில் இன்று குறைந்துள்ளது.

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.

இதனால் இந்தியாவிலும் அதிகமான அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது.

இதனால் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,136-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.62.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.62,500 ஆக உள்ளது.

SCROLL FOR NEXT