வணிகம்

பிரதமர் காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் உயர்வு: இன்று முதல் அமல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இந்தத் திட்டம் அமலான பிறகு முதன்முறையாக பிரீமியம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 2015- ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் விபத்து காப்பீடு மற்றும் உடல் ஊனத்திற்கான காப்பீடு வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா விபத்து மரணம் அல்லது மொத்த நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகையையும் மற்றும் நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ. 1 லட்சத்தையும் வழங்குகிறது.

குறைவான பிரிமீயம் மட்டுமே செலுத்தி அதிக பலன்களை பெறுவது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த நிலையில் இந்த திட்டங்களுக்கான பிரீமியம் தொகை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை பொருளாதார ரீதியில் கட்டுப்படியானதாக மாற்றுவதற்கு இவற்றின் பிரீமிய விகிதங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன. இதன் படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் மாற்றியமைக்கப்படுகின்றன.

2015 ல் இருந்து இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 31.03.2022 நிலவரப்படி அமல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.9,737 பிரீமியம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டபோதும், கடந்த ஏழு ஆண்டுகளாக பிரீமியம் விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன் முறையாக இன்று (ஜூன் 1) முதல் திருத்தியமைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT