சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ 102.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 98.26 ஆகவும் விற்பனையானது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ 102.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோலவே டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 98.59 ஆகவும் உள்ளது.
அதேசமயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று டெல்லியில் ரூ. 105.49 -க்கும், மும்பையில் ரூ.111.43- க்கும், கொல்கத்தாவில் ரூ. 106.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் ரூ.93.22 -க்கும், மும்பையில் ரூ.102.15 -க்கும், கொல்கத்தாவில் ரூ.97.33-க்கும் விற்கப்படுகிறது.