வணிகம்

பெரும் வெற்றி; ஒரு கோடிக்கும் அதிகமான ஹால்மார்க் முத்திரை நகைகள் விற்பனை: மத்திய அரசு

செய்திப்பிரிவு

“குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு, இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது”, என்று இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுவதன் வளர்ச்சிநிலை குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் 90,000 க்கும் மேற்பட்ட நகை விற்பனையாளர்கள் பதிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பதிவு செய்யப்பட்ட நகை விற்பனையாளர்களின் எண்ணிக்கை 91,603 ஆகவும், ஹால்மார்க் முத்திரை பெறுவதற்காக ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ள நகைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சமாகவும், இந்தக் காலகட்டத்தில் ஹால்மார்க் முத்திரை பெறப்பட்டுள்ள நகைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சமாகவும் இருப்பதன் வாயிலாக இந்தத் திட்டம் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருப்பது பிரதிபலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஹால்மார்க் முத்திரை பெறுவதற்காக நகைகளை அனுப்பிய விற்பனையாளர்களின் எண்ணிக்கை ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை 5145 ஆக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை 14,349 ஆக அதிகரித்தது.

நகை துறையைச் சேர்ந்தவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT