வணிகம்

ஆன்லைன் மூலம் சரக்கு கட்டணம் செலுத்துவது எப்படி? - ரயில்வே விதிமுறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சரக்கு கட்டணங்களை செலுத்த ஆன்லைன் முறைக்கான வழிகாட்டுதல்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே சரக்கு சேவைகளுக்கான கட்டணங்களை எளிதாகவும் விரைவாகவும் செலுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றத்தின் காரணமாக ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணங்களை செலுத்த ஆன்லைன் முறைக்கான வழிகாட்டுதல்களை 2021 ஏப்ரல் 30 அன்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளதின் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய பல்வேறு கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கியின் பணம் செலுத்து வழியின் மூலம் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் செலுத்தலாம்.

2021 ஜூன் 1 முதல் இந்த வழிகாட்டுதல்கள் செயல்பாட்டுக்கு வரும்.

சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் பணம் செலுத்தும் வழியின் மூலம் அனைத்துவித சரக்கு சேவைகளுக்கான கட்டணங்களையும் இணைய வங்கியியல்/ஆர்டிஜிஎஸ்/நெப்ட்/கடன் அட்டை/டெபிட் கார்டு/யூபிஐ ஆகியவற்றின் வழியாக செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் தீர்வு காணும் முறை, பணத்தை திரும்பப் பெறும் முறை ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. பதிவு செய்து கொண்டுள்ள மற்றும் பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் இந்த முறையின் மூலம் கட்டணம் செலுத்த இயலும்.

இந்த நடவடிக்கையின் மூலம் ரயில்வே சரக்கு போக்குவரத்து வர்த்தகத்திற்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT