கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஏற்றுமதி துறை மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளதாக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தலைவர் சரத்குமார் சரஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை முற்றிலுமாக முடங்கியது. இதனால், உற்பத்தி குறைந்து, ஏற்றுமதி பாதிப்படைந்தது. இந்நிலையில், கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஏற்றுமதி துறை மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, சணல், கைவினைப் பொருட்கள், மருந்துகள், நறுமணப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், பழங்கள், காய்கறிகள், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட30 வகையான பொருட்களில் 20 பொருட்களின் ஏற்றுமதி கடந்த மாதம் அதிகரித்து உள்ளது.
ஏற்றுமதிக்குத் தேவையான கன்டெய்னர்களை வழங்குதல், சரக்குக் கட்டணத்தை குறைத்தல்உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டால், நடப்புநிதியாண்டு மட்டுமின்றி வரும்ஆண்டுகளிலும் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.