கோப்புப்படம் 
வணிகம்

2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தொடர்ந்து 13-வது நாளாக விலை அதிகரிப்பு

பிடிஐ


கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 13-வது நாளாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 25 பைசாவும் எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளன.

இதனால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.83.13 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.73.32 பைசாவாகவும் அதிகரி்த்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.86 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.78.69 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இதுதான் முதல் முறையாகும். கடந்த நவம்பர் 20-ம் தேதியிக்கு முன்பாக இரு மாதங்கள் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 13வதுநாளாக உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 16 நாட்களில் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.07 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.86 பைசாவும் விலை உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பின் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது, அதேபோல டீசல் விலையில் அக்டோபர் 2-ம் தேதிக்குப் பின் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முடியும் தருவாயில் இருப்பதால்தான் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்று ஐசிஐசிஐ வங்கி ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 34 சதவீதம் சரிவடைந்திருந்த நிலையில் டிசம்பர் 4-ம்தேதி நிலவரப்படி பேரல் 49.5 டாலராக தேவை காரணமாக விலை அதிகரித்துள்ளது.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்திருந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், ஜனவரி மாதத்துக்குப்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை குறையக்கூடும்.

          
SCROLL FOR NEXT