வணிகம்

காப்புரிமை சட்ட விதிகளில் திருத்தம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

காப்புரிமை பெறுவதை எளிமையாக்கும் காப்புரிமை திருத்தம் விதிகள் 2020 அறிவிக்கப்பட்டுள்ளன.

காப்புரிமை பெறுவதற்காக படிவம் 27 தாக்கல் செய்தல், முதன்மையான ஆவணங்களின் சரிபார்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை தாக்கல் செயதல் ஆகியவற்றை எளிமையாக்கும் வகையில் காப்புரிமை (திருத்தம்) விதிகள் 2020 கொண்டு வரப்பட்டுள்ளது.

ஷம்னாத் பஷீர் மற்றும் இந்திய அரசு மற்றும் பிறருக்கு இடையேயான ரிட் மனு எண் WPC 2015-ன் 5590-இன் மீது டெல்லி உயர் நீதிமன்றம் 23-04-2018 அன்று அளித்த உத்தரவின்படி, காப்புரிமையை எளிமையாக்குவது குறித்து பங்குதாரர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில், இந்தியாவில் வணிக மட்டத்திலான (படிவம் 27) காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கையின் தேவைகளை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

காப்புரிமை (திருத்தம்) விதிகள் 2020, என்பது, 2020 அக்டோபர் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முதன்மை ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லாத பட்சத்தில், சரிபார்க்கப்பட்ட ஆங்கில ஆவணங்களை சமர்பித்தல் மற்றும் படிவம் 27 தொடர்பான தேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

படிவம் 27-இன் படி விதி 131(2)-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. ஒரே ஒரு காப்புரிமை அல்லது பல்வேறு தொடர்புடைய காப்புரிமைகளுக்கு ஒரே ஒரு படிவம் 27 தாக்கல் செய்வதால் காப்புரிமை பெறுவோருக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும்.

2. காப்புரிமை இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அந்த நபர்கள் ஒன்றிணைந்து படிவம் 27 தாக்கல் செய்யலாம்.

3. காப்புரிமை பெறுவோர் வருவாய் மதிப்பின் தொகுப்பை தோராயமாக குறிப்பிட வேண்டும்.

4. காப்புரிமை பெறுவோரின் சார்பில் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் படிவம் 27-ஐ சமர்பிக்கலாம்.

5. படிவம் 27 தாக்கல் செய்வதற்கு நிதி ஆண்டு காலாவதி ஆவதில் இருந்து ஆறு மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும். தற்போது இது மூன்று மாதங்களாக உள்ளது.

6. நிதி ஆண்டின் ஒரு சிறிய அளவு அல்லது ஒரு பகுதிக்காக காப்புரிமை பெறுவோர் படிவம் 27 தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

7. படிவம் 27 தாக்கல் செய்வது தொடர்பான தகவல் தேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ள அதே வேளையில், காப்புரிமை சட்டம் 1970-இல் உள்ள பிரிவு 146(1)-இன் படி காப்புரிமை பெறுவோரிடம் இருந்து தகவல்களை கேட்பதற்கு கட்டுப்பாட்டாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT