வணிகம்

180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு

செய்திப்பிரிவு

இந்தியாவின் முதல் அதிவேக ரயிலின் முதல் மாதிரிப்படம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளரும், தேசிய தலைநகர் பகுதியின் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் தலைவருமான துர்காசங்கர் மிஸ்ராவால் இன்று வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மிஸ்ரா, நமது பிரதமரின் லட்சியமான தற்சார்பு இந்தியாவின் ஐந்து தூண்களில் ஒன்றாக உள்கட்டமைப்பு இருக்கிறது. இந்த அதிவேக ரயில்கள் முழுவதும் அரசின் 'மேக் இன் இந்தியா' கொள்கையின் கீழ் தயாரிக்கப்படுவது பெருமை அளிக்கிறது என்றார்.

சுற்றுச்சூழலுக்கு நட்பான, குறைந்த எரிபொருளில் இயங்கும் இந்த ரயில்கள், பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தி, வாய்ப்புகளை உருவாக்கி, தேசிய தலைநகர் பகுதியில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

தேசிய தலைநகர் பகுதியின் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் வினய் குமார் சிங், தேசிய தலைநகர் பகுதியின் பிராந்திய போக்குவரத்துக் கழக நிர்வாகக்குழுவின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT