வணிகம்

ஜல் ஜீவன் இயக்கம் சார்பில் ஆராய்ச்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் செயல்படக்கூடிய தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதற்காக மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து போதுமான அளவிலும் (ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 55 லிட்டர்கள்), பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் ஒரு ஆண்டு நிறைவு செய்ததையடுத்து, சுதந்திர தினமான 15 ஆகஸ்ட், 2020 அன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை நாம் விநியோகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, குறிப்பாக காடுகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் தொலைதூர இடங்களில் வாழ்பவர்களுக்கு, கடந்த ஒரு வருடத்தில் நாம் தண்ணீரை வழங்கியிருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் இணைப்பை வழங்குவது பெண்களின், குறிப்பாக சிறுமிகளின், வேலைப்பளுவை குறைக்க உதவும். கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் இது மேம்படுத்தும்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இடையே கூட்டை ஏற்படுத்தி, குடி தண்ணீர் துறையில் உள்ள பல்வேறு சவால்களைக் களைவதற்கான பயனுள்ள அறிவுசார் விஷயங்களை உருவாக்க உதவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை https://jalshakti-ddws.gov.in/ என்னும் முகவரியில் காணலாம். விருப்பமுள்ள தனிநபர்கள் /முகமைகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT