வணிகம்

ஏழைகள் அதிகம் பாதிப்பு, பொருளாதார மீட்சி நீண்ட காலம் பிடிக்கும், நுகர்வில் கடும் அதிர்ச்சி: ஆர்பிஐ ஆண்டறிக்கை

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று ஆர்பிஐ ஆண்டறிக்கையை வெளியிட்டார். அதில் கரோனா காலக்கட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரா மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார பாதிப்பை துல்லியமாக அறுதியிடவும் முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவினால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது, குறிப்பாக போக்குவரத்து, ஹோட்டல், விடுதிகள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறை, பொழுது போக்கு துறை ஆகியவை ஸ்தம்பித்துள்ளது. தனி நுகர்வு முடங்கியுள்ளது.

உணவு மற்றும் தயாரிப்புப் பொருட்களின் விநியோகம் சீராக இல்லாததால் அவற்றின் விலை உயரும், பணவீக்கம் உயரும். நிதிச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்களும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கும்.

காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.93% ஆக அதிகரித்துள்ளது. எனினும் அக்-மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இது குறைந்து விடும்.

நடப்பு ஆகஸ்ட் பிற்பாதியில் கரோனா காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12% ஆக வீழ்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற நுகர்வு பேரதிர்ச்சி கண்டுள்ளது. பயணிகள் வாகன விற்பனை நுகர்பொருள் சப்ளை பின்னடைவு கண்டுள்ளது.

வரும் மார்ச்சில் பொருளாதாரம் பின்னடைவுப் பாதையிலிருந்து மீண்டு முன்னேற்றப்பாதைக்குச் செல்லும், பொருளாதார மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT