சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி, கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பால் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இதனால் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் 826 ரூபாயாக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை இன்று முதல் 761.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.