சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.
அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. கரோனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கி பெரும் தொழில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேர்ததிலேயே பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 2700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. எனினும் நிலைமை சீரடைந்து பின்னர் ஓரளவு வர்த்தகம் உயர்ந்தது.
எனினும் பிற்பகல் நிலவரப்படி வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது.
மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் பிற்பகல் நிலவரப்படி 676 புள்ளிகள்களுக்கும் அதிகமாக சரிந்தது.
சென்செக்ஸ் 28192 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 210 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 8258 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.