கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் இரும்பு உற்பத்தி துறை அடுத்தஇரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பாதிப்புக்குள்ளாகும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அலாய் உற்பத்தியில் உலகிலேயே சீனாதான் பெரும்பங்கு வகிப்பதாக உள்ளது. இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ்தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதும், சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக பாதிப்பினால் சர்வதேச இரும்பு உற்பத்தி துறை பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறப்பு இரும்பு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தினால் சர்வதேச இரும்பு சந்தையைக் கணிசமாகக் கைப்பற்றலாம் என்று கூறியுள்ளார்.
சீன வர்த்தகம் பெரிதும் பாதிப்பு
இரும்பு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்தியா ஆண்டுக்கு 106 மில்லியன் டன் அளவில் உற்பத்தி செய்கிறது. ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி ரொம்பவே அதிகம். சீனா 928.3 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது.
நேற்றைய நிலவரப்படி கரோனாவைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் 70,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 780ஆக உள்ளது. இதுவரை 1,800 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.
சீனாவின் வர்த்தகம் இதனால் பெரிதும் குறைந்துள்ளது. இது இந்தியாவின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வாய்ப்பு என்று அவர் கூறினார்.