சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று புதிய உயர்வை தொட்டது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 376-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 922-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 883-க்கு விற்கப்பட்டது.
பட்ஜெட் எதிரொலி
சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். மேலும், மத்திய பட்ஜெட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என்று கருதிய பெரும்பாலான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால், பெரிய அளவில் தங்கம் விலை உயர்ந்து புதிய விலையை தொட்டது. இருப்பினும், இது ஒரு தற்காலிக விலை உயர்வுதான். வரும் நாட் களில் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் இருக்கும்’’ என்றார்.