நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வரும் நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, நாடாளுமனறத்தில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020- 21-வது நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கணப்பில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து 2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை (பிப். 1) தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் பட்ஜெட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.