கோப்புப்படம் 
வணிகம்

மோடி தலைமையிலான அரசு பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்: அமெரிக்க பொருளாதார நிபுணர் கருத்து

செய்திப்பிரிவு

தற்போதைய பொருளாதார நிலையில், இந்தியா 2020-ம் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சியை எட்டுவதுகடினம். இந்த நிலையை சரிசெய்ய, மோடி அரசு பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகரித்த நிலையில் அவை கடன் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளன. இதனால் நாட்டில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் 2020-ம் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சியை எட்டுவது சற்று சிரமம் என்று தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை பணப்புழக்கம் குறைந்ததால் ஏற்றபட்ட ஒன்று. இது சுழற்சி முறையிலான பிரச்சினை என்று அவர் தெரிவித்தார்.

இந்திய நிதி நிறுவனங்கள் சமீபத்திய காலங்களில் எவ்வித வரைமுறையுமின்றி நிறுவனங்களுக்கு கடன் வழங்கின. அந்நிறுவனங்கள் அவற்றை முறையாக செலுத்தாத நிலையில் தற்போது அவை வாராக் கடனாக மாறியுள்ளன. இந்நிலையில் வாராக் கடனை குறைக்கும் பொருட்டு இந்திய நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளன.

இதனால் பணப்புழக்கம் குறைந்து, முதலீடுகளும் குறைந்துள்ளன. இந்தச் சூழலின் காரணமாக நடப்பு ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் சரிவிலேயே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சரிவை மீட்டெடுக்கும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் மோடி அரசுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. பதிலாக மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அது மிக ஆபத்தான போக்கு. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT