வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.264 உயர்வு; இன்றைய விலை என்ன?

செய்திப்பிரிவு

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,584 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார சுணக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை குறைவு, வர்த்தகம் வாய்ப்புகள் வீழ்ச்சி என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது. சில மாதங்களாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

இதற்கிடையே கடந்த செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அப்போது வரை தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 அதிகரித்துள்ளது.

8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 33 ரூபாய் அதிகரித்து 3,698 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ.31ஆயிரத்து 064 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி, ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.49,800-க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT