கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், வங்கியில் நடக்கும் மோசடிகளின் அளவு 2018-19-ம் நிதியாண்டில் 74 சதவீதம் அதிகரித்துள்ளது, அதன் மதிப்பு ரூ. 71 ஆயிரத்து 543 கோடியாக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2017-18-ம் ஆண்டில் வங்கிகளின் மோசடி அளவு ரூ.41 ஆயிரத்து 167கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2018-19-ம் ஆண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் உள்ள விவரம்:
கடந்த 2018-19ம் நிதியாண்டில் வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது, பணத்தின் மதிப்பு 74சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் (2018-19) 6 ஆயிரத்து801 வங்கி மோசடி சம்பவங்கள் நடந்த நிலையில் அதற்கு முந்தைய நிதியாண்டில் 5 ஆயிரத்து 916 மோசடி சம்பவங்கள் நடந்தன . அதாவது 15 சதவீதம் மோசடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மோசடிகளின் பணமதிப்பைப் பொறுத்தவரைக் கடந்த 2018-19ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.71 ஆயிரத்து 543 கோடி மோசடிகள் நடந்துள்ளன.
ஆனால், 2017-18ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.41 ஆயிரத்து167 கோடி மதிப்புக்கு மோசடி நடந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் நடந்துள்ள மோசடிக்கு முக்கியமான காரணம், வங்கி நிர்வாகத்துக்குள் தீவிரமான கண்காணிப்பு, ஆய்வு இல்லாததும், கடன் வழங்குவது, வசூலிப்பது ஆகியவற்றில் போதுமான கவனிப்பின்மை, அதிகாரிகள், வாடிக்கையாளர்களிடையே மோசடிகளைத் தடுக்கும் வகையில் ஒத்துழைப்பு இல்லாதது போன்றவைதான் மோசடிகள் அதிகரிக்கக் காரணம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது