வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் உயர்ந்தது.
நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டன.
வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்தது. சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்டது. வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வெங்காயம் விலை சற்று குறைந்துள்ளது.
இந்தநிலையில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களான பஞ்சாப், உ.பி. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. இதனால் உருளை கிழங்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன.
விளைச்சல் குறைந்துள்ளதால் உருளை கிழங்கு விளையும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உருளை கிழங்கு விளையும் கணிசமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்த மாநிலங்களில் உருளை கிழங்கு விலை 12 ரூபாய் என்ற அளவில் இருந்தது. போதிய உருளை கிழங்கு வராததால் இந்த விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அறுவடை முடிந்த உருளை கிழங்கு ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வரும் என்பதால் விலை குறையும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.