வணிகம்

வர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் பலவீனமாகவே இருக்கும்: பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் தகவல்

செய்திப்பிரிவு

நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகப் பொருளாதார நிலை2020-ம் ஆண்டிலும் பலவீனமாகவே இருக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் தெரிவித்து உள்ளது. விளைவாக உலகளாவிய கடன் நிலைமைகள் மேலும்பாதிப்பை சந்திக்கும் என்றும்அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

2008-2009 காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடிக்கு உள்ளாகியது.

பல வளர்ந்த நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்தன. தற்போது காணப்படும் பொருளாதார மந்தநிலை, அதுபோலான பெரும் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், 2009-ம் ஆண்டு ஏற்பட்டபெரிய அளவிலான பொருளாதாரப் பின்னடைவுபோல், 2020-ம் ஆண்டுஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளில் நடப்பு ஆண்டில்தான் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலைமை அடுத்த ஆண்டும் தொடரும் என்று மூடி’ஸ் கூறியுள்ளது.

நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள், புவி-அரசியல் சூழ்நிலை போன்றவற்றின் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர், பிரக்ஸிட் போன்றவை தற்போதைய மந்தநிலைக்கு மிக முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றின் விளைவால் 2020-ம் ஆண்டும் உலகப் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும் என்று மூடி’ஸ் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தப் போக்கு உலகளாவிய கடன் நிலைமைகளை பாதிக்கும் என்று கூறியுள்ளது. அதேபோல் வட்டி விகித அளவு குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. குறைந்த வட்டி விகிதம் நிறுவனங்களுக்கு சாதகமானது என்றாலும் அது வங்கிகளைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் தொடங்கியது. அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும், சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும் மாறி மாறி வரி விகிதத்தை உயர்த்தின. இதனால் இரு நாட்டு நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாயின.

அந்த சமயம் இந்த வர்த்தகப் போர்அமெரிக்கா சீனாவை மட்டும்பாதிக்காது; உலக நாடுகளையும் சேர்த்தே பாதிக்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT