இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளது. தேக்க நிலைஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஜி-20 நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலங்களவையில் கேரள மாநில உறுப்பினர் என்கே பிரேமசந்திரன் கேட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில்அவர் மேலும் கூறியதாவது: ஜி 20 நாடுகளில்நடப்பு நிதி ஆண்டில் எட்டப்படும் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக பொருளாதார பேரவை கணித்துள்ளதன்படி இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றார்.
பொருளாதார வளர்ச்சியை குறித்த அளவில் வைத்துக் கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக தனியார் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியன ஜிடிபி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. இவை அனைத்தும் ஸ்திரமான பொருளாதார சூழல் நிலவுவதன் அடையாளங்களாகும். முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் புதிய தொழில் துறை நிறுவனங்களுக்கு நிறுவன வரி 15 சதவீதம் என விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த நிறுவன வரி இந்தியாவில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தவிர நிறுவங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆம் ஆத்மி உறுப்பினர் பகவந்த் சிங் மான்எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதித் துறைஇணை அமைச்சர் அனுராக் தாகுர், 2016-ம்ஆண்டு அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றும், இதன் மூலம் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 5 சதவீத வளர்ச்சி என்பது தேக்க நிலையைக் காட்டுவதல்ல என்று சுட்டிக் காட்டிய அமைச்சர், 2025-ம் ஆண்டில்5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகஇந்தியா வளரும், அந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்றார்.