வணிகம்

4 மாநிலங்களில் மருத்துவ உபகரண உற்பத்தி பூங்கா: மத்திய அரசு அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட பூங்காக்கள் அமைக்க நான்கு மாநிலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு உலகத்தரத்திலான மருத்துவ சிகிச்சை குறைவான கட்டணத்தில் கிடைக்க வழிவகை செய்யும் நோக்கில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மருத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும்பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உத்தராகண்ட், குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களும் இத்தகைய பூங்காக்களை அமைக்க அனுமதி கோரியுள்ளன.

இந்தப் பூங்காக்கள் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபகரணங்களின் தரத்தை சோதனை செய்யும் கூடங்கள் அங்கேயே அமைக்கப்பட உள்ளன. இதனால், தரமான உபகரணங்கள், குறைவான உற்பத்தி செலவில் உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மருத்து உபகரானங்கள் தேவை ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஆகும். ஆனால், இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த மருத்துவஉபகரண சந்தை 250 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் உற்பத்தி பங்களிப்பு வெறும் 2 சதவீதம் மட்டுமே.

SCROLL FOR NEXT