புதுடெல்லி
டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால் டாக்ஸி நிறுவனமான உபர், வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய யுக்திகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது.
அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் வைகோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியை சூழ்ந்துள்ளது.
இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்துள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் இன்று மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பன்னாட்டு கால்டாக்ஸி நிறுவனமான உபர் வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பல நகரங்களில் உள்ளதுபோலவே சேர்ந்து பயணம் செய்து, குறைவாக கட்டணம் செலுத்தும் முறை டெல்லயில் உள்ளது. இதனை பெரிய அளவில் வாடிக்கையாளர்களிடம் தற்போது பிரபல படுத்தி வருகிறது உபர் நிறுவனம்.
ஒரே வழியாக பயணம் செய்யும் வாடிக்கையாளர்களை அதிகமாக கிடைக்கும்போது கார்களின் எண்ணிக்கை குறைவதுடன், கட்டணமும் குறையும் என்பதால் இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமூகவலைதளங்கள் மூலம் உபர் நிறுவனம் பிரச்சாரம் செய்து வருகிறது.
அதன்படி உங்கள் காரை பின்னால் விடுங்கள், உபரில் சேர்ந்து பயணம் செய்யலாம் என வாடிக்கையாளர்களுக்கு உபர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு டெல்லி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வருவதாக கூறுகிறார் உபர் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர் மனிஷா லாத் குப்தா.
அவர் மேலும் கூறுகையில் ‘‘பெரும் நகரங்களில் போக்குவரத்துக்கு இந்த முறையே இனிமேல் ஏற்றது. கூடுதல் பயணிகள் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரே காரில் செல்வதால் கட்டணம் குறையும். இதன் மூலம் சாலைகளில் செல்லும் கார்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். டெல்லி காற்று மாசு பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும். இதனால் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு காணப்படுகிறது’’ எனக் கூறினார்.