வணிகம்

உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தைத் தொட ரூ.168 மட்டுமே மிச்சம்

செய்திப்பிரிவு

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறுவதைத் தொடர்ந்து இன்றும் அதன் மதிப்பு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.29 ஆயிரத்து 832-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 73 ரூபாய் உயர்ந்து 3,383 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை 584 ரூபாய் உயர்ந்து 27,064 ஆக விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் விலை 44.30 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை 216 ரூபாய் உயர்ந்து ரூ.29,832 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை, ரூ.27 உயர்ந்து ரூ.3,729 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் சுத்தத் தங்கம், ரூ.31 ஆயிரத்து 088-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.52.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.52,600-க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT