வணிகம்

அந்நிய முதலீடு ரூ. 5,000 கோடி

செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு கடந்த 7 நாளில் ரூ. 5 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது.

மத்தியில் நிலையான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர் கள் (எப்ஐஐ) பங்குச் சந்தையில் ரூ. 2,124 கோடியும், கடன் பத்திரங் களில் ரூ. 2,871 கோடியும் முதலீடு செய்துள்ளனர். இத்தகைய முதலீடு மே 2-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவையாகும். இத்தகவலை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

அந்நிய நிறுவன நேரடி முதலீடு அதிகரித்ததால் பங்குச் சந்தை குறியீட்டெண் 2.5 சதவீதம் உயர்ந்தது. இதனால் குறியீட்டெண் 23 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது.

அந்நிய நிறுவன முதலீடு பங்குச் சந்தையில் இது வரை ரூ. 33,923 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் பத்திர முதலீடு ரூ. 29,217 கோடியாக உள்ளது. ஆக மொத்தம் எப்ஐஐ முதலீடு ரூ. 63,140 கோடியாகும்.

ஏப்ரல் மாதத்தில் எப்ஐஐ முதலீடு ரூ. 9,602 கோடியாக உயர்ந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இது ரூ. 20,077 கோடியாகும்.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,710 அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்நிறுவனங்கள் உப கணக்குகளாக 6,404 கணக்குளை நிர்வகிக்கின்றன.

          
SCROLL FOR NEXT