வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்யும் அளவை ரிசர்வ் வங்கி இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர் (ரூ. 1.50 கோடி) வரை முதலீடு செய்யலாம்.
அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை திருப்திகரமாக உள்ளதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இத்தகைய அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட் டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்ட நிதிக் கொள்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. தாராளமய வெளிப்பற்று திட்டத்தின் (எல்ஆர்எஸ்) அடிப்படையில் ஒரு நபர் ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலரை முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டதால் ரிசர்வ் வங்கி வெளி முதலீடுகளை 2 லட்சம் டாலரிலிருந்து 75 ஆயிரம் டாலராகக் குறைத்தது. நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வரம்பு 1.25 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டது.
இந்த வரம்பு உயர்த்தப்பட்டதன் மூலம் முதலீட்டாளர்கள் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு ஆர்பிஐ-யிடம் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை.
கடந்த மாதம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவாக 3,22,135 கோடி டாலராக உயர்ந்தது. கடந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் 1,615 கோடி டாலரை முதலீடு செய்தனர்.
ஏற்கெனவே அரசு கடன் பத்திரங்களில் 3,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவன கடன் பத்திரங்களில் 3,250 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர்
அந்நிய நேரடி முதலீடு 22 சதவீதம் அதிகரித்து 1,888 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் இதுத 1,545 கோடி டாலராக இருந்தது. 1