எப்எம்சிஜி நிறுவனமான கெவின்கேர் நேற்று புதிய வகை `மில்க்ஷேக்’-கினை அறிமுகம் செய்தது. பழம், தேன் மற்றும் பால் ஆகியவற்றை கொண்டு இந்த மில்க்ஷேக் தயாரிக்கப்பட்டுள்ளது. மாம்பழம், கொய்யா மற்றும் ஆப்பிள் ஆகிய மூன்று வகை பானங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. ரசாயன கலவை ஏதும் இல்லாமல் பழச்சாறினை மட்டுமே கொண்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.
தினந்தோறும் பருகும் வகையிலான பானமாக இதனை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரஞ்ச் உள்ளிட்ட சில பழங்களை பாலுடன் சேர்க்க முடியாது என்பதால், ஆரம்பத்தில் மூன்று பழங்களில் மட்டுமே இவற்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. மேலும் சில பழங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இவற்றை 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் என்று கூறினார்.