இந்தியாவின் 2-வது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அமெரிக்காவில் புதிய வழக்கை எதிர்கொள்கிறது.
இந்நிறுவனத்தின் முன்னாள் குடியேற்றப்பிரிவின் தலைவர் தொடுத்த வழக்கில் நிறுவனத்தின் மூத்த நிர்வாகக் குழு தெற்காசியர்களுக்குச் சார்பாக செயல்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கைத் தொடர்ந்த எரிக் கிரீன் 2011 அக்டோபரில் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்து 2016 ஜூன் 28 வரை பணியாற்றினார். இன்போசிஸ் பிளானோ டெக்சாஸ் அலுவலகத்தில் கிரீன் பணியிலமர்த்தப்பட்டார்.
இவர் டெக்சாஸ் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தொடந்த வழக்கில், இன்போசிஸ் நிர்வாகம் தெற்காசியர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, தெற்காசியர்கள் அல்லாதவர்களை பாகுபாட்டுடன் வேண்டுமென்றே நடத்துகிறது. அதாவது வேலைக்குத் தேர்வு செய்வது முதல், பதவி உயர்வு, சம்பளம், வேலையை விட்டு அனுப்புவது ஆகியவற்றில் தெற்காசியரல்லாதாருக்கு கடுமையான பாரபட்சம் காட்டியது. இந்த வழக்கை கிரீனுக்காக எடுத்துச் சென்றது கில்கோர் & கில்கோர் சட்ட நிறுவனமாகும். இவர் நிறுவனத்தில் அனைத்து எச் 1 பி, எல்1, ஐ-9 விசாக்கள் பற்றி ஆராயும் துறையில் இருந்தார். 2012 மத்தியில் அமெரிக்க குடியேற்ற நடைமுறைகள் பிரிவில் நிரந்தரமாக நிறுவனத்தில் அமர்த்தப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது, “வழக்கில் இருக்கும் விவகாரம் பற்றி கருத்து கூறுவதற்கில்லை” என்று கூறிவிட்டது.
ஏற்கெனவே எச்1பி விசா நடைமுறைகளை இன்போசிஸ் துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கீரீன் தனது மனுவில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாசுதேவ நாயக், வினோத் ஹம்பாபுர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.