மொபைல் போன் மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய `பாரத் இண்டர் பேஸ் பார் மணி (பீம்) செயலியை இதுவரை 1 கோடி முறை தரவிறக்கம் செய்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறு வர்த்தகர்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் பீம் செயலியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் எளிதாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இந்தசெயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாட்களி லேயே 1 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதற்கு பீம் செயலி மிகச் சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பீம் செயலி மூலம் எளிதாகவும் வேகமாகவும் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிவதால் இளைஞர்கள் மத்தியி லும் வர்த்தகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பீம் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்தபின் வங்கி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். பிறகு யுபிஐ பின் நம்பரை புதிதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பயன்படுத்துவோரின் மொபைல் எண் பரிவர்த்தனை முகவரியாக இருக்கும். ஒரு முறை பதிவு செய்துவிட்டால் அதன் பிறகு பரிவர்த்தனைகளை செய்ய முடியும். தற்போது இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இயங்கி வருகிறது.