இன்னும் ஒரு மாதத்தில் சரக்கு மற்றும் சேவையை (ஜிஎஸ்டி) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட வாய்ப்பு இருக்கிறது என பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நிறுவனங்கள் எந்த தகவலையும் மறைக்க முடியாது. அதனால் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 1,000 நிறுவனங்கள் வரை பங்குச்சந்தையில் பட்டியலிட வாய்ப்பு இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் 74 நிறுவனங்கள் சுமார் ரூ.27,600 கோடி அளவுக்கு நிதி திரட்டினார்கள். 2010-ம் ஆண்டுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருப்பது இப்போதுதான். மேலும் அதிக நிறுவனங்கள் பட்டியலிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
தற்போது 5.1 கோடி நிறுவனங்கள் தங்களின் பெரும்பாலான வியாபாரத்தை ரொக்கமாகவே கையாளுகின்றன. ஆனால் ஜிஎஸ்டிக்கு பிறகு ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதால், குறைவான வரு மானத்தை காண்பிக்க இயலாது. அதனால் நிறுவனங்கள் பட்டிய லிடப்படாமல் இருப்பதனால் கிடைக்கக் கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்காது என்பதால், நிறுவனங்கள் பட்டியலிடுவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் நிதியை நிறுவனங்கள் திரட்ட (ஐபிஓ, எப்பிஓ, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல வழிகளில்) பிஎஸ்இ உதவ இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 3,000 கோடி டாலர் அளவுக்கு மட்டுமே நிதி திரட்டல் நடக்கிறது. தவிர தற்போது 3.4 கோடி முதலீட்டாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனை 10 கோடியாக உயர்த்தும் திட்டமும் இருக்கிறது.
நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கும் அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்ககுவதற்கு பிஎஸ்இ உதவி வருகிறது. பிஎஸ்இ வர்த்தகம் செய்வதற்கான இடம் மட்டுமல்ல என ஆஷிஷ் சவுகான் தெரிவித்தார்.