வணிகம்

கெய்ரோ சன்மார் ஆலைக்கு எகிப்து பிரதமர் பாராட்டு

பிடிஐ

கெய்ரோவில் உள்ள சன்மார் குழுமத்தைச் சேர்ந்த டிசிஐ சன்மார் ஆலையின் செயல்பாடுகளை எகிப்து பிரதமர் இப்ரஹிம் மெஹ்லெப் பாராட்டியுள்ளார். எகிப்தில் இந்திய நிறுவனம் செய்துள்ள மிக அதிக அளவிலான முதலீட்டு ஆலை இதுவாகும்.

டிசிஐ சன்மார் ரசாயன ஆலையைப் பார்வையிட்ட இப்ரஹிம், இந்தியத் தொழில்நுட்பத்தை வெகுவாக புகழ்ந்தார். அவரது அமைச்சரவை சகாக்கள் 6 பேரும் ஆலையைப் பார்வையிட்டனர். இந்த ஆலையின் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் இப்ரஹிம் ஆலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எகிப்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆலையின் பங்களிப்பு மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்களையும் அவர் உன்னிப்பாகக் கேட்டதாக எகிப்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி குறிப்பிட்டார்.

இந்த ஆலைக்கு எகிப்து அரசு செய்து தருவதாக அளித்திருந்த உறுதிமொழிகள் மற்றும்முதலீட்டாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். டிசிஐ சன்மார் ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 ஆயிரம் எகிப்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆலையை பிரதமர் சுற்றிப் பார்த்ததன் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் எகிப்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதாகவும் இதன் மூலம் 250 கோடி டாலர் அளவுக்கு முதலீடு எகிப்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த சன்மார் குழுமம் ரசாயனம் சார்ந்த தொழில் மற்றும் பொறியியல், கப்பல் போக்குவரத்து ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT