மத்திய அரசு வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட முடிவு செய்துள்ளது. ஏலம் விடுவது தொடர்பான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காக பல தரப்பினரின் ஆலோசனை களை மத்திய நிலக்கரி அமைச்சகம் கோரியுள்ளது. இந்த முடிவுகள் வந்தவுடன் அதன் அடிப்படையில் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவது தொடர்பான வரைவு கொள்கை சமீபத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்பட்டன. பொது ஏலத்தில் விடுவதற்கான சுரங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரம், சுரங்கம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
வர்த்தக ரீதியில் ஏலம் விடுவதில் சிறிய மற்றும் பெரிய சுரங்கங்கள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
வரைவு கொள்கை தொடர்பான கருத்துகள் இம்மாதம் 26-ம் தேதி வரை பெறப்பட்டு அதனடிப்படை யில் கொள்கை வகுக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் சுரங்கங்கள் ஏலம் விடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
வர்த்தக ரீதியிலான சுரங்கங் களை ஏலம் விடுவதற்கு அமைச் சரவை ஒப்புதல் தேவையில்லை. இதற்கு மத்திய அமைச்சர் அனுமதி இருந்தாலே போதுமானது என்று சுரங்கத்துறைச் செயலர் சுஷீல் குமார் தெரிவித்தார்.
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு போட்டியாக வர்த்தக ரீதியிலான சுரங்கங்களை உருவாக்கலாம் என பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இத்தகைய வர்த்தக சுரங்கங் களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை ஏலம் எடுத்த நிறுவனங் கள் அப்போதைய சந்தை நிலவரத் துக்கேற்ப தீர்மானிக்க அனுமதிக்க லாம் என்று கூறப்பட்டது.
தற்போது 3 பெரிய சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.1,500 கோடிக்குக் குறைவாக இருக்கக் கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 கோடி சதுர மீட்டர் அளவுக்கு சுரங்கம் வெட்டியுள்ள நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் அனுபவம் மிக்க நிறுவனங்கள் கூட்டு சேர்ந்தும் ஏலத்தில் பங்கேற்கலாம் என விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி தற்போது கணிசமாகக் குறைந் துள்ளது. தமிழ்நாட்டில் செய்யூரில் உள்ள அனல் மின் நிலையம் இறக்குமதி நிலக்கரி மூலம் செயல் படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இனி இது முழுவதும் உள்நாட்டு நிலக்கரி மூலம் செயல்படுத்த முடியும் என்று சுஷில் குமார் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலக்கரி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மார்ச் மாத நிலவரப்படி தற்போது 6.9 கோடி டன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்தார்.