வணிகம்

பிமல் ஜலான் தலைமையில் நிபுணர் குழு நியமனம்

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி எவ்வளவு நிதியை கையிருப்பாக வைத்துக் கொள்வது என்பதை முடிவு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி உபரியாக உள்ள நிதியை, அரசின் நிதி பற்றாக்குறை இலக்கை எட்ட தர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும், நலிவடைந்த வங்கிகள் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வழங்க, அந்த வங்கிகளில் ரிசர்வ் வங்கி முதலீடு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நடந்த ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க கமிட்டி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், ரிசர்வ் வங்கி உபரி நிதிதொடர்பாக விவாதித்து முடிவு செய்ய முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் துணை தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கமிட்டியின் உறுப்பினர்களாக ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குனர்களான பாரத் ஜோஷி, சுதிர் மங்கத், துணை கவர்னர் விஸ்வநாதன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ஆகியோர் நி்யமிக்கப்பட்டுள்ளனர். பிமல் ஜலான் தலைமையிலான கமிட்டி நடத்தும் முதல் கூட்டத்திலிருந்து 90 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT