சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன்பிறகு, சில நாட்கள் விலை குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் கண்டு வந்தது. கடந்த 7-ம் தேதி பவுன் விலை ரூ.89 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.800-ம், மாலையில் ரூ.680-ம் உயர்ந்தது. இதன்மூலம், தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.185 உயர்ந்து ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.99,360 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.1.70 லட்சமாகவும் இருந்தது.