வணிகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.64,000-ஐ நெருங்கியது!

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.10) பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.

இருப்பினும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தங்கம் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 7,980-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.

ஆபரணத்தங்கம் கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.3,360 அதிகரித்துள்ளது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.69,200-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT