சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.61,840 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது வரலாறு காணாத விலையுயர்வாகும்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
அண்மைக்காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,730-க்கும், பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளது, டாலருக்கு மாற்றாக வேற நாணயத்தைக் கொண்டு வர முயற்சித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகர்வுகளால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டைப் பொருத்தவரை திருமண சீசன் என்பதால் நகை வாங்கும் தேவை அதிகரித்துள்ளதன் காரணத்தாலும் விலை ஏறியுள்ளது.