வணிகம்

அந்நிய நேரடி முதலீட்டு சட்ட மீறல்: அமேசான், பிளிப்கார்ட் நிர்வாகிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள், தங்களது சொந்த உற்பத்தி பொருட்களை தங்களது இணையதளங்கள் மூலம் விற்பனை செய்ய இந்தியாவில் தடை உள்ளது. ஆனால், வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் இந்த தடையை மீறி தங்களது சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இத்தகைய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பொருட்களை விற்கின்றன. அவ்வாறு விற்கும் நிறுவனங்களில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அதன் மூலம் பொருட்களின் இருப்பு மீது இவை கட்டுப்பாட்டை செலுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இத்தகைய புகார்கள் தொடர்பாக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள், அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தை மீறி இருப்பது விற்பனையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT