வாஷிங்டன்: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா கூறியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது மிகச் சிறப்பாக உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் அல்லது அதற்கும் மேலான விகிதத்தை எட்டுவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தியாவில் வளர்ச்சி வேகம் அதிகமாக காணப்படுவதற்கு உள்நாட்டு சந்தையும் மிக முக்கிய காரணமாகும். சுத்தமான
காற்று, ஆரோக்கியமான குடிநீர், மக்களின் வாழ்க்கை தரம் ஆகியவற்றில் இந்தியா கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற திட்டங்களுக்கான பணிகளை பிரதமர் விரைவுபடுத்த வேண்டும். ஏற்கெனவே, இதற்கான பல திட்டங்களில் இந்தியாவோடு இணைந்து உலக வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான பலன் வரும் மாதங்களில் கிடைக்க துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.