சென்னை: இந்தியாவில் பண்டிகை கால முதல் கட்ட ஸ்மார்ட்போன் விற்பனை குறைவு. இருப்பினும் விற்பனையான போன்களின் விலை மதிப்பு அதிகம். இதை கவுண்டர்பாயின்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓராண்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பண்டிகை கால விற்பனையின் பங்கு 20 முதல் 25 சதவீதம் என உள்ளது. இந்நிலையில், நடப்பு பண்டிகை கால விற்பனையில் (செப்.26 முதல் அக்.7 வரை) 13 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவாகும்.
அதே நேரத்தில் இந்த போன்களின் ஒட்டுமொத்த விலை மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் மதிப்பு 3.2 பில்லியன் டாலர்களாக உள்ளது. ரூ.30 ஆயிரத்துக்கு மேல் விலை உள்ள ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதமும், ரூ.45 ஆயிரத்துக்கு மேல் விலை உள்ள அல்ட்ரா-ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
சந்தையில் அல்ட்ரா-ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் போன்கள் காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த விற்பனையில் 70 சதவீதம் ஆன்லைனில் விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.