வணிகம்

தங்கம் விலை தொடர் சரிவு: 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1000-க்கும் மேல் குறைந்தது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6.400-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 87.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்திருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 நாட்கள் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் அதன் பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கத்தில் புதிய முதலீடு செய்பவர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா? இந்நிலையில், தங்கம் இப்போது குறுகிய காலத்தில் குறைந்தாலும் கூட காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், தங்கம் விலை விறுவிறுவென ஏறிவிடும். அப்போது அது புதிய உச்சம் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.5% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதனுடைய தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே எப்போதுமே தங்கத்தின் மீதான முதலீடுகள் பாதுகாப்பானதே என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT