நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிந்து ஒரு முட்டையின் விலை 410 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 410 பைசாவாக நிர்ணயியக்கப் பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் முட்டை விலை 30 பைசா சரிந்துள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை ( பைசாவில் ): சென்னை 500, பர்வாலா 360, பெங்களூரு 485, டெல்லி 405, ஹைதராபாத் 390, மும்பை 465, மைசூரு 487, விஜயவாடா 397, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 455. கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.118 என பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.87 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் ( சிகா ) நிர்ணயித்துள்ளது.