ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையைவிட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஒரு டன் ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். இந்த வாரம் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் விலை, கடந்தவார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.38 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு டன் இளநீரின் விலை ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லி அளவுக்கு தண்ணீர் கொண்ட முதல் தர இளநீர் ரூ.80 வரை விற்கப் படுகிறது. இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு, இளநீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. அதே நேரம் இளநீரின் தேவை உச்சத்தில் உள்ளது” என்றார்.