சென்னை: சர்வதேச பொருளாதார நில வரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வரு கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மார்ச் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், மார்ச் 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், அடுத்த நாளான 29-ம் தேதி ரூ.51 ஆயிரம், ஏப்ரல் 4-ம் தேதி ரூ.52 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,510-க்கும், ஒரு பவுன் ரூ.52,080-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.105 என பவுனுக்கு ரூ.840 அதிகரித்தது. இதனால், நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.6,615, ஒரு பவுன் ரூ.52,920 என விலை உயர்ந்தது.
இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,980-க்கும், ஒரு பவுன் ரூ.55,840-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.7,085, ஒரு பவுன் ரூ.56,680 என விலை உயர்ந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ.87 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.87,000 ஆக இருந்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கி இருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.